games

img

ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா - 2024

விளையாட்டு உலகின் முதன்மையான தொடராக இருப்பது ஒலிம்பிக் தொடராகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரை நடத்துவது மிகப்பெரிய கவுரவமான விசயம் என்ற நிலையில், ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் வெள்ளியன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் பயிற்சியாளர், அணிக்குழுவினர் என 30,000 பேர் ஒலிம்பிக் தொடரில் சங்கமித்துள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக...

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா தண்ணீரில் நடைபெறுகிறது. பாரீஸ் நகரின் முக்கிய அடையாளமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் அருகில் உள்ள செய்ன்  நதியில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரர்கள், கலைஞர்கள் 162 படகுகள் மூலம் செய்ன் நதியில் அழைத்து வரப்படுகின்றனர். ஆற்றில் படகுகள் மூலம் வீரர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரப்பாதையில் அழைத்து வரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு - பிரிட்டன் படைகள்

பிரெஞ்சுப் படை என அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டின் காவல் மற்றும் ராணுவப்படைகளும், பிரிட்டன் படைகள் என அழைக்கப்படும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் காவல்  மற்றும் ராணுவப்படைகளும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பாதுகாப்பிற்கு களமிறங்கியுள்ளன. இதுபோக அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உளவுத்துறை அமைப்புகளும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பாதுகாப்புக்காக பிரான்ஸ் நாட்டில் மையம் கொண்டுள்ளது.

40,000 வகை உணவுகள்

பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்காக பிரான்ஸ் அரசு பிரம்மாண்ட உணவு வழங்கும் திட்டத் தை கையில் எடுத்துள்ளது. உலகில் உள்ள 40,000 உணவுகளும் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் சமைக்கப்பட உள்ளன. சீனா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் வீராங்கனைகளுக்காக கஞ்சி வகைகளையும்  பிரான்ஸ் அரசு உணவு மெனுவில் சேர்த்துள் ளது. இதுபோக 30% உணவுகள் தாவர வகைகளை கொண்டதாக இருக்கும் என்றும், ஒரே நேரத்தில் 4000 வீரர்- வீராங்கனைகள் உணவு உண்ணலாம் என பாரீஸ் ஒலிம்பிக் மெஸ் நிர்வாகம் தனது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு கவுரவம்... 

தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரருமான சரத் கமல் ஆகியோர் கையில் ஏந்தி செல்கின்றனர். இதில் சரத் கமல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

329 விளையாட்டுகள்

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 32 விளையாட்டுப் பிரிவுகள் அறிவிக்கபட்டுள்ள நிலையில், 32 பிரிவுகளில் இருந்து 329 போட்டி பிரிவுகள் நடத்தப்பட உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் 329 விளையாட்டுகளையும் 16 நாட்கள் நடத்தி முடிப்பது ஒலிம்பிக் போட்டியின் தனிப்பட்ட வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.

24ஆம் தேதியே தொடங்கிவிட்டது

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் முறைப்படி ஜூலை 26  அன்று தொடங்கினாலும், 2 நாட்களுக்கு முன்கூட்டியே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதாவது ஜூலை 24 அன்று கால்பந்து, வில்வித்தை உள்ளிட்ட பெரிய விளையாட்டுகளின் போட்டிகள் தொடங்கிவிட்டன.

இந்தியா - 112

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 112 வீரர் - வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். 112  வீரர் - வீராங்கனைகளும் 16 விளையாட்டுகளின் 69 பிரிவுகளில் பதக்க வேட்டை நிகழ்த்த உள்ளனர்.